Monday, August 8, 2016

சில காதல் கதைகள் - குறுங்கதை

ஆறுமணி ஆகியிருந்தது. கோட்டைப்பகுதி சற்று பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருந்தது. ஆறு ஏழு இளம் குடும்பங்கள், உடற்பயிற்சி செய்யும் ராணுவ வீரர்கள், நடைப்பயிற்சி செய்யும் யாழின் கொழுத்த குடும்பத்து மூத்தவர்கள சிலர் என மனிதர்கள் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். எட்டு வயது மதிக்கத்தக்க வாடலான சிறுமியொருத்தி தன் தங்கையை இடுப்பில் சுமந்தபடியே கச்சான் சரைகளை ஐம்பது ரூபாவுக்கு விற்க முயற்சித்துக்கொண்டிருந்தாள். இத்தனை பரபரப்புக்குள்ளும் கோட்டை சுவர் மேல் இருந்த இளைஞர்களுடன் சாடையால் பேசிக்கொண்டிருந்த பெண்ணொருத்தி சற்று நேரத்தில் அவர்களுடன் காணாமல் போக, அவளைப்போலவே பாவனை கொண்ட இன்னொருத்தி அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டாள்.

இந்த சலனங்கள் எவற்றையும் பொருட்படுத்தாது எனக்கு சற்று முன்னால் அமர்ந்தவாறு ஊடறுத்து வந்த அந்த சிறு கடலையும் அதை தாண்டி அடர்த்தியாக தெரியும் மண்டைதீவு கண்டல்தாவரங்களையும் பார்த்துக்கொண்டிருந்தாள் நிவேதா. தனித்திருத்தலை அனுபவிப்பது பற்றி அவளிடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

”பாத்தது காணும். அவளும் கொஞ்ச நேரத்தில போயிடுவாள்”

திரும்பி நிவேதாவை பார்த்தேன். சற்று முன் இருந்ததை விட ஒரு அமைதி அவள் முகத்தில் தெரிந்தது.

“சும்மாதான் பாத்துக்கொண்டிருந்தன்”

“எனக்கு தெரியும்....” சிரித்துக்கொண்டே சொன்னாள். ”யாழ்ப்பாணம் போனால் நீ பழுதா போயிருவ” என்று சில வருடங்களுக்கு முன் சொன்னதை நினைத்துக்கொண்டாளோ என்னவோ.

சி.ரி.பி பஸ் ஒன்று மண்டைதீவு பாலத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. அவளது பார்வையும் பஸ்சை பின் தொடர்ந்தது.

”நினைவிருக்கா உங்களுக்கு... ஊர்ல இருந்து ரியூசனை கட் பண்ணிட்டு றியோவுக்கு கூட்டிக்கொண்டு வந்திங்க....”

“ம்ம்...”

“போகும்போது நான் பயந்துகொண்டே இருந்தன். தெரிஞ்சவங்கள் பாத்திருவாங்களோ, லேட் ஆனா வீட்ட தேடுவாங்கள் எண்டு உங்களை குடைஞ்சுகொண்டே வந்தன்...

நீங்க எதுவுமே சொல்லேல்ல.... பஸ்ல இருந்து இறங்கி போகும்போது என் கைய பிடிச்சிட்டே வந்திங்க....

எனக்கு எந்த பயமுமே இருக்கேல்ல அப்பேக்க... அவ்வளவு தெளிவா இருந்தன் அண்டைக்கு.. "

எதுவும் மேசாமல் அமைதியாக இருந்தேன். அவளது மடியில் இருந்த குழந்தை என்னை வினோதமாக பார்த்துக்கொண்டிருந்தது.

சில நிமிட அமைதிக்கு பின் கேட்டாள் “உங்களுக்கு என்னில கோபமே இல்லையா வருன்”

“இப்ப இல்ல நிவேதா... உங்களுக்கு கல்யாணம் ஆகிற்றுது எண்டு கேள்விப்பட்ட அந்த நிமிசத்தில கூட உங்களில கோபம் வரேல்ல”

“ஏன்.. நான் செய்தது துரோகம் இல்லையா”

“நீங்க என்ன எந்தளவுக்கு காதலிச்சிங்க எண்டது எனக்கு தெரியும் நிவேதா. கல்யாணம் பண்ணுற முடிவுக்கு நீங்க ஒகே சொல்லியிருக்கிறிங்க எண்டா அதுக்கு பின்னால உங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கஷ்டத்தை என்னால விளங்கிக்கொள்ள முடிஞ்சுது..”

நிவேதா என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

”எனக்கு என்னிலதான் கோபம். உங்களை அவ்வளவு கஷ்டத்தில தனியா கைவிட்டுட்டேன் எண்டு... இப்ப சந்தோசமா இருக்கு நிவேதா. உங்களுக்கு நல்லதொரு லைஃப் கிடைச்சிருக்கு”

நிவேதாவின் கண்கள் கலங்கியிருந்தது.

"பேர் ஹரிஸ்..” சொல்லிக்கொண்டே குழந்தையை என்னிடம் கொடுத்தாள். குழந்தை இப்போது என்னை விநோதமாக பார்க்கவில்லை. ஒட்டிக்கொண்டது.

“அவரும் உங்கள பார்க்க வாறதாத்தான் சொன்னார். நான் தான் வேண்டாம் எண்டுட்டன்”

விடைபெற்று செல்லும்போது திரும்பி பார்த்தாள்.

“சந்தோசமா இருக்கு வருன்”

அவள் போனபின்னும் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தேன். புதிய பெண்ணை காணவில்லை. பழையவளிடம் கச்சான் விற்ற சிறுமி பணத்தையும் மிகுதி கச்சான்களையும் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

0 Comments:

Post a Comment

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |