Showing posts with label ஈழத்து சினிமா. Show all posts
Showing posts with label ஈழத்து சினிமா. Show all posts

Monday, January 21, 2019

ஈழசினிமாவின் மாற்று சிந்தனைகள் குறித்த உரையாடல் - சதாபிரணவனை முன்வைத்து !

இலங்கை தமிழ் சினிமா அதன் படைப்பு நிலை சார்ந்தும், அரசியல் சார்ந்தும் நீண்ட விவாதங்களையும் உரையாடல்களையும் வேண்டி நிற்கும் நேரம் இது.  போருக்கு முன்னரான காலம், விடுதலைப்புலிகளின் நிதர்சனம், போருக்கு பிந்தைய காலம் என மூன்று காலப்பகுதிகளில் மூன்று வேறுபட்ட தன்மைகளுடன் இலங்கை தமிழ் சினிமாவின் பரிமானம் அமைந்திருந்தாலும் எமது அயல் சினிமாவான சிங்கள சினிமாவோடு ஒப்பிடுகையில் பாரியதொரு தேக்க நிலையை எமது சினிமா கொண்டிருப்பதை அவதானிக்க முடியும்.

விடுதலைப்புலிகளின் காலத்தில் எழுந்த சினிமாக்கள் எமது தனித்துவமான அடையாளங்களை கொண்டிருந்தாலும், பெரும்பாண்மையாக புலிகளின் போராட்டம் தொடர்பான பிரச்சார திரைப்படங்களாகவே அமைந்துபோனதால் அது எமது சமூகத்தை தாண்டியோ அல்லது புலிகளின் காலத்தை தாண்டியோ நிலைபெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியதாகிற்று. அதே நேரம் புலிகளுக்கு முந்தைய, பிந்தைய கால சினிமாக்கள் தென்னிந்திய சினிமாவின் இலங்கை மீள்பதிவாகவே வந்துகொண்டிருக்கும் அவலம்தான் நடந்தது, நடந்துகொண்டிருக்கிறது. 

பெரும்பாண்மையானதொரு இளைஞர் சமூகம் சினிமா குறித்த பிரக்ஞைகள் அற்று தென்னிந்திய அபத்தங்களை மீள் பதிப்பு செய்துகொண்டிருக்கும் இதே இலங்கை தமிழ் சினிமா களத்தில், அவற்றிலிருந்து முற்றிலுமாக விலகி, சினிமா பற்றிய தெளிவான கருதுகோள்களுடன் எமது கதைகளை எமது சமூகத்தை தாண்டியும் கொண்டு செல்லும் கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களது சினிமா குறித்த கருதுகோள் என்னவாக இருக்கிறது, சினிமாவை எப்படி முன்நகர்த்திச் செல்கிறார்கள் என்ற கேள்விகள் மூலமாக எமது உரையாடலை முன்னெடுத்து செல்வது என்பது காத்திரமானதொரு நிகழ்வாக இருக்கும்.

சதா பிரணவன்

புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட சதாபிரணவனின் இயற்பெயர் சிவகாந்தன். சதாசிவம் என்ற தந்தையின் பெயரையும் பிரணவசொரூபி என்ற தாயின் பெயரையும் இணைத்து சதாபிரணவன் ஆகியிருக்கிறார். போர்க்காலத்தில் புலம்பெயர்ந்து பிரான்ஸ் செல்லும் சதாபிரணவனின் கவனத்தை சினிமா ஈர்த்துக்கொள்கிறது.  இயல்பிலேயே சினிமா மீது தீவிர நாட்டம் கொண்டவர்  சதா. அத்தகையதொரு சினிமா மோகமும், ஐரோப்பிய நாடுகளில் இலகுவாக கைவசமான தொழில்நுட்ப வசதிகளும் சினிமா துறையில் சதாபிரணவனது நுழைவை இலகுவாக்கிவிடுகின்றன. அவரது சினிமாத்துறையின் ஆரம்பம் என்பது சினிமா மீது கொண்ட தீவிரமான மோகத்தால் மாத்திரமே நிகழ்கிறது. தான் சார்ந்த சமூகத்தின் கதைகளை வெளி உலகிற்கு சொல்லும் ஊடகமாக சினிமாவை பாவிக்கவேண்டும் என்ற இலக்கு அதன் பின்னரான காலத்திலேயே அவரது எண்ணக்கருவாக வளர்கிறது. சதாபிரணவனின் குறும்படங்களில் இந்த வளர்ச்சி போக்கினை அவதானிக்கமுடியும். அந்தவகையில் சதாபிரணவனிடம் சினிமா பற்றிய தெளிந்த சிந்தனையும், நேர்மையும் இருக்கிறது. அதுவே அவரை சிறந்ததொரு படைப்பாளிக்கான பாதையில் இட்டுச்செல்வதையும் மறுக்கமுடியாது.

தன்னை சுற்றியுள்ள மக்களின் வாழ்வியலை, அரசியலும் போரும் அவர்களின் வாழ்வில் செலுத்தும் தாக்கங்களை கதைகளாக சொல்கிறார் இவர். புலம்பெயர்ந்து வாழும் இளைஞர் சமூகத்தில் தற்போது ஏற்பட்டு வரும் குறும்பட மோகம் பற்றி பேச விளைந்த இவரது “தினப்பயணம்” குறும்படம் அந்த ஒற்றை கதையினூடே, வழிப்பறிகள் குறித்து தினம் தினம் பயந்துகொண்டே பயணம் செய்யும் நம் மக்களின் அவலங்களையும், அந்த நேரத்திலும் தம்மிடையேயான அரசியல் வேறுபாடுகளால் பிளவுண்டு கிடப்பதையும் எள்ளலாக காட்சிப்புலத்தில் கொண்டுவருகிறது. அதேபோல ஈழத்தில் சித்திரவதைக்குள்ளான ஒரு இளைஞனும், அவனை சித்திரவதைக்குள்ளாக்கிய ஒட்டுக்குழுவை சேர்ந்தவன் ஒருவனும் நீண்ட இடைவெளியின் பின் புலம்பெயர் நாடொன்றில் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வையும், அவர்களுக்கிடையிலான உணர்வு வெளிப்பாட்டையும் அற்புதமாக காட்சிப்படுத்திய “போராளிக்கு இட்ட பெயர்” முதலான குறும்படங்கள் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களிடையே நிகழும் அவலங்களையும், அரசியல்களையும் திரைப்படைப்பாக வெளிக்கொண்டு வருகின்றன. ஈழத்தில், இராணுவத்தின் பிடியிலிருக்கும் குடும்பம் ஒன்று அனுபவிக்கும் கொடூர நிகழ்வொன்றை காட்சிப்புலத்தில் கொண்டு அதனூடே ஒட்டுமொத்த போரின் அவலங்களையும் நிமிட நேரத்தில் பதிவுசெய்து சென்ற “God is Dead” குறும்படம் சதாபிரணவனின் படைப்புக்களில் ஆகச்சிறந்த படைப்பாக அடையாளம் காணப்பட்டது. ஆக, எமது மக்களை பாதிக்கும் அரசியல், எமது மக்களுக்கிடையே நிகழும் அரசியல் ஆகியவையே சதாபிரணவனது கதையின் மையப்பொருளாக இருப்பதை காணலாம். 

குறும்படங்களுக்காக கதைகளை தெரிவுசெய்யும் முறையில் தேர்ந்ததொரு இயக்குனருக்கான பாங்கினை அவதானிக்கமுடியும். ”பல கதைகளின் கரு எப்போதும் தோன்றிக்கொண்டேதான் இருக்கும் சில தினங்கள் கூட நிலைகாமல் போனவை பல அதில் அடங்கும்” என சொல்லும் சதாபிரணவன் தனது அனுபவத்திலிருந்து ஒரு நிகழ்வை இவ்வாறு சொல்கிறார். “அந்த அந்த கால மனநிலையை பொறுத்தே ஒரு கதை உருப்பெறுகிறது. உதாரணமாக "இன்றிருப்பத்தேழு" கதை அந்த காலகட்டத்தின், எனது மனச்சிதைவின் பதிவு .அந்த பதிவை குறும்படம் என்று கூட சொல்லமுடியாது.ஒரு படைப்பாளியாக எனக்கு முக்கியமாக இருந்தாலும் அது ஒரு பதிவு அவ்வளவுதான்.”

தான் சார்ந்த சமூகத்தின் போராட்டம் குறித்து எவ்வித அக்கறையுமற்று வாழும் வெளிநாட்டு குடும்பம் ஒன்றின் கதையை சொன்ன “விடுதலை” குறும்படத்தோடு ஆரம்பித்து இதுவரை ஏழு குறும்படங்களை இயக்கியுள்ளார் சதா. இவற்றில் God is dead குறும்படம் பிரான்ஸ் மொபைல் குறும்பட போட்டி மற்றும் கொரியா மொபைல் குறும்பட போட்டி ஆகியவற்றில் சிறந்த குறும்படமாக முதலிடம் பெற்றுக்கொண்டது. சினிமாவை வெறுமனே பொழுதுபோக்கு ஊடகமாக கடந்துபோய்விடக்கூடாது, எமது கதைகளை சர்வதேசத்திடம் சொல்வதற்குரிய காத்திரமான ஊடகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற சதாபிரணவனின் கனவுக்கு கிடைத்த முதல் வெற்றி அது. 

தனது கதைகளோடு, வேறு எழுத்தாளர்களின் கதைகளையும் குறும்படமாக இயக்குவதற்கு தயங்குவதில்லை சதாபிரணவன். செரஸ் குறும்படத்தின் மூலம் எழுத்தாளர் ஷோபாசக்தியோடு இணைந்து பணியாற்றியுள்ளார். ஷோபாசக்தியின் கதை ஒன்றை திரைப்படமாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

சதாபிரணவனுக்கு எந்தவொரு கட்சியோ இயக்கமோ சாராத தெளிந்ததோர் அரசியல் பார்வை உண்டு. அது முற்று முழுதாக மக்கள் நலன்சார்ந்த அரசியல். இயக்க உள்முரன்பாடுகளை பேசி, தீவிர தமிழ் தேசியவாதிகளின் விமர்சனத்துக்குள்ளான  “போராளிக்கு இட்ட பெயர்” குறூம்படத்தையும், அதே தேசியவாதிகளால் பாராட்டப்பட்ட God is Dead என்னும் பின் போர்ச்சூழல் குறும்படம் ஒன்றையும் சதாபிரணவனால் கொடுக்கமுடிகிறது என்றால் அது அவரது மக்கள் நலன்சார்ந்த அரசியல் பார்வையி வெளிப்பாடாகவே இருக்கமுடியும். இந்த அரசியல்தான் தீவிர புலி எதிர்ப்பாளரான ஷோபாசக்தியோடு இணைந்து வேலை செய்யவும், அதேநேரம் அவரால் “புலிக்குட்டி” என அழைக்கப்படுவதுமானதொரு சூழ்நிலையை சதாபிரணவனுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

குறும்படங்கள் மூலம் குறிப்பிடத்தக்கதொரு மாற்றத்தை ஈழசினிமாவில் நிகழ்த்திக்கொண்டிருந்த சதாபிரணவன் விரைவில் முழுநீள திரைப்படங்களை இயக்கவுள்ளார். மிக நீண்டதொரு மாற்றத்தையும் சக கலைஞர்களுக்கு கற்றுக்கொள்வதற்கான இடைவெளிகளையும் அவரது திரைப்படங்கள் ஏற்படுத்தும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

புதியசொல் சஞ்சிகைக்காக
மதுரன் ரவீந்திரன்

Share This:   FacebookTwitterGoogle+

Monday, July 4, 2016

தொகுப்பின் திறமையினால் படைப்புகளுக்கு மெருகூட்டியவர் மதுரன் ரவீந்திரன் !

“முழு நீளத் திரைப்படமானாலும் சரி அல்லது குறும்படமானாலும் சரி அவற்றின் திரைக் கதையானது அதன் தயாரிப்பில் இரண்டு நிலைகளில்தான் முழுமைபெறுவதாக நான் கருது கிறேன். ஒன்று இயக்குனரின் மேசையில். மற்றையது படத்தொகுப்பாளரின் மேசையில்” என்று தனது அனுபவத்தை சொல்லுகிற மதுரன் ரவீந்திரனிடம் அவர் ஆரம்ப வாழ்க்கை பற்றிக் கேட்டேன்.

“அம்மா வேலணையையும் அப்பா புளியங்கூடலையும் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். பிறந்து ஒரு மாத காலம் மாத்திரமே வேலணையிலிருந்ததாக அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.பின்பு விசுவமடுவுக்கு இடம்பெயர்ந்தோம். பின்பு மீண்டும் திரும்பவும் புளியங்கூடலுக்கு வந்துவிட்டோம். எனது ஆரம்ப கல்வி விசுவமடு மகாவித்தியாலயத்தில் தொடங்கியது. இடையில் பற்பல மாற்றங்கள். சாதாரண தரம் வரையும் வேலணை சென்றல் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியிலும் கற்றேன். உயர் தரம் வரை மொத்தம் ஆறு கல்விக் கூடங்களைச் சந்தித்திருக்கிறேன். 2007 ஆம் ஆண்டு புளிய ங்கூடலிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்து யாழ் நகரத்திற்கு வந்தேன். உயர் தரத்திற்கு பிறகு  ஓய்வு நேரம் அதிகம் கிடைத்தது. அப்போதுதான்  திரைப்படங்களை அதிகமாக பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. மொழி கடந்து பல படைப்புகளைப் பார்த் தேன்.  தொலைக்காட்சி வாடகைக்கு எடுத்து, ஜெனரேட்டர் மின்சாரத்தில் இரவிரவாக படம் பார்த்த காலத்தில் தொடங்கிய சினிமா மீதான மோகம் இந்த காலத்தில் மேலும் அதிகரித்தது. சினிமா குறித்த ஆழமான தேடலுக்கும் வழிவகுத்தது. அந்தக் காலகட்டத்தில் வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருந்தேன். நண்பர் மதி சுதாவும் வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருந்தார். அதனூடாக நாம் நண்பரானோம். பின்பு “ஆறுதல்” என்ற தொண்டர் நிறுவனத்தில் இருவரும் ஒன்றாகப் பணிசெய்யக் கூடிய சந்தர்பம் கிடைத்தது. அப்போது இருவரும் குறும்படம் எடுக்க விருப்பங் கொண்டிருந்தாலும்  வளங்களில்லாததால் முயற்சியைக் கைவிடவேண்டியதாயிற்று. சில நாட்களின் பின்னர் ஹரிகரன் என்ற நண்பரைச் சந்தித்தேன். அவர் கொழும்பில் நடக்கவிருந்த குறும்படப் போட்டிக்கு ஒரு படம் தயாரிக்கவிருப்பதாகச் சொன்னார். அந்தத் தயாரிப்புக்குத் தரப்பட்ட கால அவகாசம் ஒரு நிமிடம். அதற்காக படம் ஒன்றினைத் தயாரித்தோம். அதனை “திருப்பம்”  என்ற தலைப்பில் ஹரிகரன் இயக்க அதன் படத்தொகுப்பை நான் செய்தேன். அந்தப் படைப்புக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. அதுவே எனது கன்னிச் செயற்பாடு. எனது தேடலின் மூலமாகவே நான் படத்தொகுப்புக்கான  மென் பொருளைக் கையாளக் கற்றுக் கொண்டேன்.  படத்தொகுப்பு என்பது வெறுமனே மென்பொருளை கையாள்வது மாத்திரமல்ல. அது ஒரு கதை சொல்லல் முறை. இயக்குனரின் கையில் இருந்த கதையை பூரணப்படுத்தும் உத்தி என என் தேடல்களின் மூலம் தெரிந்துகொண்டேன்.” என தனது அனுபவத்தைச் சொன்னவரிடம் அவர் தொடர் முயற்சி பற்றிக் கேட்டேன்.

இயக்குனராகவோ, படத்தொகுப்பாளராகவோ, எப்படியாயினும் சினிமாவில் சிறந்ததொரு கதைசொல்லி ஆகவேண்டும் என்பதுதான் என் கனவு. படத்தொகுப்பாளராக இப்போது சந்தர்ப்பம் கைகூடியிருக்கிறது. இந்த துறையில் மேலும் என்னை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதே இப்போதைய தேவையாக இருக்கிறது. 

நன்பன் சஞ்சிகன் அறிமுகமான நாளில் இருந்து இருவரும் நம்மிடமுள்ள கதைகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதும் அதுபற்றி விவாதிப்பதுமாக இருக்கிறோம். அந்த விவாதங்களில் நன்றாக இருக்கிறது என தெரிவு செய்யப்படும் கதைகள் படமாகும். சஞ்சிகனின் கதைகள் சில படமாகிவிட்டன. எனது கதைகள் படமாகுவதற்கான ஒரு தருணத்திற்காக காத்திருக்கின்றன. அந்த தருணம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதுவாக நிகழும். அதற்காகத்தான் நானும் காத்திருக்கிறேன். அதேபோல எனது விஞ்ஞான புனைவு ஒன்றை "Pursuit" என்னும் பெயரில் திரைப்படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் சஞ்சிகன்” என்றார் அவர்.

தங்களது கதைகள் எப்படியானவை? சமூக நலன் சார்ந்த செய்திகளை சொல்லுகின்ற சமூக விழிப்புணர்வை தருபவைகளாக அமையுமா? அல்லது வெறும் கதைப்படங்களாக மட்டும் இருக்குமா? என்று மதுரனிடம் கேட்டேன்.

கலை என்பது வெறுமனே பொழுதுபோக்கு ஊடகமாக அமைந்துவிட்டால் நல்லது என்பதுதான் என் கருத்து. சமூகத்துக்கு அச்சுறுத்தலான கருத்துக்களை சினிமாவினூடாக விதைக்காதவரை சமூக நலன் சார்ந்த செய்திகளும் அவசியமற்றதாகத்தான் இருக்கும். ஆக, கலை ஒரு கொண்டாட்டத்திற்குரியதாக இருக்கும். ஆனால் இன்றைய சினிமா நிலவரம்தான் எல்லோருக்கும் தெரிந்ததே? 

சமூக நலன்சார்ந்த செய்திகளை திரைப்படங்களில் சொல்ல முயற்சிக்கும்போது அது திணிக்கப்பட்டதாகவோ, யதார்த்த வாழ்விற்கு அப்பாற்பட்டதாகவோ இருந்தால் மக்கள் இலகுவில் அவற்றை புறக்கணித்துவிடுகிறார்கள். நாம் கண்ட அனுபவம் இதுதான். சமீபத்தில்கூட “இறைவி” என்னும் தென்னிந்திய திரைப்படம் ஒன்று பெண்ணிய சுதந்திரம் பற்றி பேசியதற்காக கவனத்தை பெற்றது. ஆண்கள் பலரும் பெண்களின் நிலை பற்றி வருத்தத்தோடு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். உண்மையிலேயே அவர்கள் பெண்களின் உணர்வுகளை புரிந்துகொண்டார்களா என்றால் இல்லை. ஒருவாரம் கழிந்ததும் இறைவி திரைப்படம் கொடுத்த திரையரங்க மனநிலை மற்றும் கிளர்ச்சியில் இருந்து விடுபட்டு வழக்கமான  வாழ்விற்குள் நுழைந்துவிட்டார்கள். ஆக, இறைவி திரைப்படம் தற்காலிகமானதொரு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியதே தவிர எந்தவிதமான சமூகமாற்றத்துக்கும் அடிகோலவில்லை என்பதே யதார்த்தம். ஆகவே எனது படங்கள் எந்தவிதமான சமூக அச்சுறுத்தல் கருத்துக்களையும் விதைக்காத, சாதாரண பொழுதுபோக்கு படங்களாகவே இருக்கும். என்கிறார் மதுரன் ரவீந்திரன்.

சினிமாத்துறையில் உங்கள் முயற்சிகளுக்கூடாக யாரை அடையாளப்படுத்துகிறீர்கள்? யாரை முன்மாதிரியாகக் கொள்ளுகிறீர்கள்?

”எனக்கு பல இயக்குனர்களை பிடிக்கும். கிம் கி டுக், அல்கேந்திரோ இன்னாரிட்டு, நோலன் என பலரை பிடிக்கும். வான்கோவின் ஓவியங்களை போல கிம் கி டுக்கின் படங்களை காலவரையற்று பார்த்துக்கொண்டே இருப்பேன். ஆனாலும் யாரை முன்மாதிரியாக கொள்வது என்பதில் சிக்கல். முன்மாதிரி என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் யாரையும் முன்மாதிரியாகக் கொள்வதில்லை. எனக்கென ஒரு தனித்துவத்தைப்பேண வேண்டுமென்பது எனது குறிக்கோள். எனது படைப்புகளில் எமது அடையாளங்கள் அதிகம் பேணப்பட வேண்டு மென்பதுவும், அவற்றில் எமது கதைகளையே  சொல்ல வேண்டும் என்பதுவும் எனது விருப்பமும் எதிர்பார்ப்புமாகும்.

பொதுவாக சினிமா துறை என்று பார்க்கப்போனால் ஈழத்துச் சினிமாத்துறையில் உள்ளவர்கள்  ஈரானியத் துறையை தமக்கு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது ஈரானிய சினிமா துறையை, அதன் வளர்ச்சியை எடுத்து கொள்ளலாமேயொழிய ஈரானிய சினிமாக்களை அல்ல. ஈரானியர்களின் வாழ்வியல் வேறு எமது வாழ்வியல் வேறு. இரண்டையும் ஒப்பிடமுடியாது. ஈரானிய சினிமாவை எடுத்துக் கொண்டால் அது இப்போது நாங்கள் இருக்கின்ற தொரு சூழ்நிலையில் இருந்துதான் எழுச்சியும், வளர்ச்சியும் பெற்றிருக்கிறது. எப்படியென்றால் எமது சினிமாவின் உண்மைத் தன்மையை எப்படி தென்னிந்திய சினிமாத்துறை பாதிப்பிற்கு உள்ளாக்குகிறதோ, அப்படியே அமெரிக்க சினிமாக்களும் ஈரானிய சினிமாவின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாகப் பாதிப்பிற்குள்ளாக்கியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஈரானிய சினிமாக்களெல்லாம் அமெரிக்க சினிமாவின் தழுவல்களாகவே அல்லது அவற்றின் பிரதிகளாகவே இருந்திருக்கின்றன. அத்தனை பாதிப்பிற்கு உள்ளாகியிருந்த ஈரானிய சினிமாவானது ஈரானியப் புரட்சியின் பின்னர்தான் எழுச்சி பெற்றதைக் காணலாம். எனவேதான் ஈரானிய சினிமாத் துறையைப் பின்பற்ற வேண்டுமென்று சொல்கிறேன்” என்றார் அவர்.

ஈழத்து சினிமாவானது எதிர்காலத்தே ஆரோக்கியமானதும் எங்களுக்கானதுமான சினிமாவாக வர வாய்ப்பிருக்கிறதா? என எனது உரையாடலின் முடிவில் மதுரனைக் கேட்டேன்.

“தற்போது ஈழத்து சினிமாவானது ஒரு கலங்கல் நிலையிலேயே உள்ளது. உடனடியாக அத்தகைய வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் ஆரோக்கியமான எதிர்காலம் உண்டென்பதற்குச் சான்றாக அவ்வப்போது நம்பிக்கையைத் தரக்கூடிய படைப்புகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய படைப்புகளின் படைப்பாளிகள் தான் எங்களுக்குரிய சினிமாவின் ஆரம்பகர்த்தாக்கள் என எண்ணுகிறேன். அத்துடன் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கக் கூடியவர்களும் அவர்களே” என தனது கருத்தைத் தெரிவித்த மதுரன் அடக்கமானவர். தனது கருத்துக்களை உறுதி படத்தெரிவிப்பவர். சொல்லிலும் விடச் செயலில் நாட்டமுள்ளவர். வாசிப்பதில் அதிக ஆர்வமும்,  ஆழ்ந்த இலக்கிய இரசனையையுமுடைய ஒரு இளைஞனைச் சந்தித்த திருப்தியில் அவரிடமிருந்து விடைபெற்றேன்.

நேர்காணல்
கணபதி சர்வானந்தா

Share This:   FacebookTwitterGoogle+

Saturday, March 26, 2016

”ஈழத்து சினிமா” - கோடம்பாக்கத்தின் பிரதியாக்க கனவு !

இலங்கையை பொறுத்தவரை சிங்கள சினிமா ஓரளவு பலமான கட்டமைப்புடன் இயங்க ஆரம்பித்து பலகாலம் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். குறுகியதொரு பரப்பை களமாக கொண்ட வணிக சினிமாவும் சரி, சர்வதேச பார்வையாளர்களை இலக்காக கொண்ட உலகசினிமாவிலும் சரி சிங்கள சினிமா நன்றாக கால் பதித்துக்கொண்டுள்ளதோடு தொடர்ச்சியான இயக்க நிலையிலும் உள்ளது.

தமிழ் சினிமாவின் நிலை என்னவாக இருக்கிறது? புலிகளின் காலத்தில் பிரச்சார படங்களை தாண்டி சர்வதேச பார்வையாளர்களுக்கான  திரைப்பட முயற்சிகள் எடுக்கப்படவில்லை ஆயினும், திரைப்படத்துறை சார்ந்த தெளிவான திட்டமிடலும், நகர்வும் இருந்தது. வெளிநாட்டு திரைப்படங்கள் (தென்னிந்திய சினிமா உள்ளடங்கலாக) முற்றிலுமாக தடை செய்யப்பட்டோ அல்லது மிக இறுக்காமான தரக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டோதான் வெளியிடப்பட்டன. அதற்கு மாற்றீடாக புலிகளாலேயே முதலீடு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட ஏராளமான திரைப்படங்களும் குறும்படங்களும் பெருமளவில் மக்களின் வரவேற்பை பெற்றிருந்தன. ஈழசினிமா என்ற கனவுக்கான நல்லதொரு களம் இக்காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையை, 1979 இல் நிகழ்ந்த ஈரான் இஸ்லாமிய புரட்சிக்கு பின்னரான ஈரானிய சினிமாத்துறையின் சூழ்நிலையோடு ஒப்பிடுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். ஈரான் அரசும், புலிகளும் கலைத்துறையின், முக்கியமாக சினிமாவின் தாக்கத்தையும், தேவையையும் நன்றாகவே புரிந்துகொண்டிருந்தார்கள். அதன் காரணமாகத்தான் ஒரு புறம் போர் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் சினிமாவுக்கான ஆதரவை தீவிரப்படுத்தியிருந்தார்கள். இருப்பினும், புலிகளால் பிரச்சார சினிமா என்ற வகையை தாண்டி வெளியே வரமுடியாமல் போன காரணத்தினால்தான் ஈரானிய சினிமா எட்டிய உச்சத்தை அவ்வளவு இலகுவில் அடைய முடியாமல் போய்விட்டது. புலிகளுக்கு பின்னரான காலத்தில், ஈழத்து தமிழ் சினிமாத்துறையை முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டிய தேவை ஏற்பட்டதற்கும் இந்த  சூழ்நிலையின் தாக்கம்தான் அதிகமாக இருக்கமுடியும்.

தற்போது வரையறைகளோ, கட்டுப்பாடுகளோ அற்ற, முற்றிலும் சுதந்திரமான வெளியொன்று ஈழத்திலுள்ள திரைப்படத்துறை இளைஞர்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இத்தகைய சுதந்திரத்தின் வெளிப்பாடுகள் எத்தகையது என்பதை நாம் கண்ணுற்றபடியேதான் இருக்கிறோம். இப்பதிவின் பேசுபொருள் திரைப்படங்களின் உள்ளடக்கம் என்பதல்லாமல் திரைப்பட தயாரிப்பு பற்றியது என்பதால் அதை ஒருபுறம் வைத்துவிடுவோம். புலிகளின் காலத்தில் திரைப்படங்களுக்கென போதியளவு நிதி மற்றும் ஏனைய வளங்கள் புலிகளாலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. தற்போது, தயாரிப்பு என்பது நிர்வாக அமைப்பிலிருந்து தனிநபர் கைகளுக்கு மாறியதன் பின்னர், அதன் நோக்கமும், கையாளும் திறனும் முற்றிலுமாக வேறோர் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. சற்று தெளிவாக சொல்லவேண்டுமானால், நல்லதொரு சினிமா துறை என்பதை விட இன்னுமொரு கோடம்பாக்கத்தை உருவாக்கும் பாதையில்தான் அது பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஒரு பகுதி இளைஞர்கள் திரைப்படங்கள் மீதான ஆர்வத்தால் சொந்த முதலீட்டில் குறும்படங்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறார்கள். ஓரளவு புதிய முயற்சிகளிலும், ரசனைக்கேற்ற படங்களையும் கொடுப்பவர்களாகவும் இவர்களை அடையாளம் காணலாம். இவர்களுடைய ஆகக்கூடிய முதலீடு என்பது முப்பதாயிரம் ரூபாவுடன் முடிவடைகிறது. இன்னொரு பகுதியினர், புலம்பெயர் தேசத்திலிருந்தோ அல்லது ஈழத்தில் சிறு முதலாளிகளிடம் இருந்தோ முதலீட்டை பெற்றுக்கொள்கிறார்கள். கோடம்பாக்க மீள் உற்பத்தி என்ற கனவு இந்த வகையினரிடம் இருந்தே உற்பத்தியாகிறது. திரைப்படத்தின் கதை, தயாரிப்பில் ஆரம்பித்து இயக்குனர், நடிகர், நடிகை போன்றோரின் நடையுடை பாவனைகள் வரை கோடம்பாக்கம் பிரதி செய்யப்படுகிறது. ஈழத்து விஜய்களும், அஜித்களும், தனுஷ்களும் உருவாகுகிறார்கள். தமக்கான நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கிக்கொள்வதாக கற்பனைக்குள் புரள்கிறார்கள். இப்படியானதொரு மாயையான புகழ், கடந்த இரண்டுவருட காலத்தில் ஈழத்து சினிமாவை மோசமானதொரு நிலைக்குள் சிக்கவைத்திருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

மேற்கூறிய போலி அந்தஸ்துகள் எதுவுமில்லாமல், நல்ல கதை ஒன்றிற்கான தயாரிப்பாளரை பெற்றுக்கொள்வது மிக கடினமானதொரு செயல் என்னுமளவில்தான் இன்றைய ஈழத்தமிழ் சினிமா துறை இருக்கிறது. அப்படியே ஒருவர் முன்வந்தாலும், அவரது விருப்பத்துக்கு இணங்கி கதையில் சில நகைச்சுவைகளையும், சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்களையும் இணைக்கவோ, தயாரிப்பாளரின் விருப்பத்திற்குரிய நடிகையை படத்தில் சேர்த்துக்கொள்ளவோ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இருந்துதான் நாம் “நமது சினிமா” பற்றி பேசவேண்டியிருக்கிறது.  நடிப்பையே அறியாத ஒருவர் நடிகை என்னும் பெயரில் நாளொன்றுக்கு பத்தாயிரம் சம்பளமாக பெற்றுக்கொண்டிருக்க, நல்ல கதையொன்றை வைத்திருப்பவன் இருபதாயிரம் ரூபா முதலீட்டை பெற்றுக்கொள்ளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் இருந்துதான் எமது “ஈரானிய சினிமா” இலக்கை கனவுகாண வேண்டியுள்ளது.

ஆக, கனவு ஈரானிய சினிமாவாகவும், நகர்வு கோடம்பாக்க சினிமாவாகவும் இயங்க ஆரம்பித்திருக்கும் எமது சினிமா துறையின் எதிர்காலம் குறித்து பலமாகவே துயரப்படவேண்டியுள்ளது. வணிக சினிமா என்பது எமக்கு தேவையான ஒன்றுதான். தொழில்நுட்ப கலைஞர்களை தொடர்ச்சியான இயங்குநிலையில், பயிற்சியில் வைத்திருக்க, கலைத்திரைப்படங்களுக்கான முதலீடுகளை இலகுபடுத்த, மக்களின் களிப்பு மனநிலையை ஈடுசெய்ய, தொழில்துறையாக்குவதன் மூலம் இத்துறையில் ஈடுபடும் இளைஞர்களின் பொருளாதார தேவைகளை சரிசெய்ய என பல்வேறு காரணங்களுக்காக வணிக சினிமாவின் தேவையை நியாயப்படுத்தலாம். ஆனால் கோடம்பாக்க சினிமாவை பிரதி செய்வதன் மூலம் வணிக சினிமா என்ற நிலையை ஒருபோதும் அடைந்துவிடமுடியாது.

ஈழத்தில் இருந்து சர்வதேச களத்துக்கு சென்ற ஒரே படமாக இளங்கோராமின் “மௌன விழித்துளிகள்” குறும்படத்தை குறிப்பிடலாம். வியாபார ரீதியாக ஒரு மாற்றத்தை கொண்டுவந்த படமாக எதை சொல்லமுடியும்? ஐந்து முதல் பத்து இலட்சம் வரை முதலீடாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் போட்ட முதலையாவது மீளப்பெற்றுக்கொள்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. பின் எப்படி வணிக சினிமா சாத்தியம்?

ஏன் ஈழத்து சினிமா இன்னொரு கோடம்பாக்கம் ஆகமுடியாது. அல்லது அப்படி ஆகுவதில் உள்ள ஆபத்து என்ன? அட, நம்ம பையன் விஜய் மாதிரி பண்ணுறான், அஜித் மாதிரி பண்ணுறான் என்று சுய இன்பம் காண்பதுடன் ஒரு துறை பலம்பெற்றுவிடமுடியுமா?

சினிமா துறையை பொறுத்தவரை அடித்தளம் இடுவதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கும் “புதியன புனைதல்” அவசியமாகிறது. அதிலும், வர்த்தக நோக்கில் நகரும்போது இதன் அவசியம் கட்டாயமாகிறது. வெறுமனே கதை டெம்ப்ளேட்களையும் நட்சத்திர அந்தஸ்துக்களையும் போலியாக பிரதிசெய்வதன் மூலம் வர்த்தக சந்தையில் இடம்பிடித்துக்கொள்ளலாம் என்பது முகட்டுவளையை பார்த்து கனவு காண்பதற்கு மட்டுமே சாத்தியமானதாக இருக்கும்.

சிறிய கதை ஒன்று.. நான் சிறியவனாக இருந்த காலத்தில் என் தந்தையார் நெல் பயிரிட்டு விவசாயம் செய்தவர். அவர் நெல் விதைக்கும் காலத்தில், சில நெல்விதைகளை திருடி, வீட்டு கோடியில் குட்டியாக ஒரு வயல் செய்து விதைத்து விளையாடுவேன். காலப்போக்கில் அதில் பத்தோ பதினைந்தோ விதைகள் முளைத்திருக்கும். அதற்கு பசைளை இடவேண்டும், அறுவடை செய்யவேண்டும், சந்தையில் விற்கவேண்டும் என்றெல்லாம் தீவிரமான கனவு இருக்கும். அப்பாவை கூட்டிக்கொண்டுபோய் என் வயலை காட்டினால் அவர் சிரித்துக்கொண்டே முதுகில் தட்டிவிட்டு போய்விடுவார். அப்பாவை போலவே வயல் செய்து விற்க முனைந்த என் பரிதாபத்திற்குரிய கனவு அத்தோடு மறைந்து போய்விடும்.

இப்போ ஈழ சினிமாவுக்கு வருவோம் :) இந்திய சினிமாத்துறை என்பது நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்து அப்போதே பலமானதும், பரந்தளவுமான வியாபாரச்  சந்தையை கையகப்படுத்திக்கொண்டுள்ள துறை. மிகப்பலமான வலையமைப்பு அது. அப்படியான தளத்தில் கால்பதிக்க முயற்சிக்கும்போது எமக்கு ஒரு தனித்துவம் தேவைப்படுகிறது. எனது வயல் விளையாட்டை போல, அவர்களையே குழந்தைத்தனமாக பிரதிபண்ணிவிட்டு சந்தைப்படுத்த முயற்சிப்பதெல்லாம் சுத்த அபத்தம். வியாபாரம் என்பது தட்டிக்கொடுப்பதற்கெல்லாம் அப்பாற்பட்டது எனபதை புரிந்துகொள்ளவேண்டும். இதுவரை ஐந்தோ ஆறோ முழுநீள திரைப்படங்கள் ஈழத்தில் எடுக்கப்பட்டு திரையிடப்பட்டுமிருக்கின்றன. இவற்றில் எத்தனை முதலிட்ட காசையாவது திருப்ப பெற்றுக்கொண்டார்கள் என்று கேட்டு பார்த்தால் ஒருவரும் இல்லை என்பதுதான் பதில். இதில் என்ன பயன்? நாங்களும் இந்திய லெவல் என்று சுய இன்பம் கண்டதுதான் மிச்சம்.

ஒரு  திரைப்படத்தை முழுமையாக்கி அதை திரைக்கு கொண்டுவரும் வரைக்குமான செலவாக, ஆகக்குறைந்தது பன்னிரண்டு இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. (பணியாற்றுபவர்களின் ஊதியம் உள்ளடங்கலாக) இவ்வளவு பணம்,நேரம் செலவு செய்து எடுக்கும் படத்தை ஒன்றிரண்டு நாட்கள் ராஜாவிலோ, செல்லா தியேட்டரிலோ ஓட்டிவிடுவதுடன் எல்லாம் முடிந்துவிடுகிறது.  மிஞ்சி மிஞ்சி போனால் இரண்டு இலட்சத்தை திருப்ப பெறலாம். இதுவா வியாபாரம்?

ஏன் இந்த படங்களை சந்தைப்படுத்த முடியவில்லை என்றால், அவற்றின் பிரதி பண்ணப்பட்ட உள்ளடக்கங்கள்தான் காரணம். சந்தைவாய்ப்புக்கள் இல்லை என்பதெல்லாம் இயலாமையான பேச்சுக்கள்தான். சந்தை வாய்ப்புக்களை நாம்தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும். அதற்கு “புதியன புனைதல்” வேண்டும். என்னை பொறுத்தவரை லெனின் சிவத்தின் ”A Gun and a Ring" தமிழ்சினிமாவிலிருந்து முற்றிலிம் மாறுபட்ட, அதேநேரம் வர்த்தக சினிமாவுக்குரிய அத்தனை சாத்தியங்களையும் கொண்ட திரைப்படம். ஆனால் போதியளவான சந்தைப்படுத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்படாமையால் வெற்றியடைய முடியவில்லை.

நாங்கள் சிறிய வயதிலிருந்தே கோடம்பாக்க சினிமாவுடன் வளர்ந்தவர்கள். எங்களுக்கு அப்படியான சினிமாக்கள்தான் பிடிக்கும் என்றால் வர்த்தக நோக்கை முற்றிலுமாக மறந்துவிட்டு சுய திருப்திக்காக சிலகாலம் படம் எடுத்துவிட்டு வேறு வேலைகளை பார்க்க ஆரம்பிக்கலாம். இல்லாவிட்டால் கோடம்பாக்க சினிமா இறக்குமதிகளை இங்கு தடைசெய்துவிடலாம். புலிகளும் அதைத்தான் செய்தார்கள். இஸ்லாமிய புரட்சியின் போது ஈரானிலும் அதைத்தான் செய்தார்கள். ஆனால் அதற்குரிய சூழ்நிலை இப்போது இல்லை என்பதுதான் யதார்த்தம்.



மதுரன் ரவீந்திரன்




Share This:   FacebookTwitterGoogle+

Thursday, August 20, 2015

அஞ்ஞானவாசம், ஏன் இஞ்ச வந்தனி; இரு குறும்படங்கள் பற்றிய பார்வை !


காட்சி ஊடகங்களின் பரிணாமம் காலத்திற்குக் காலம் மாற்றமடைந்து வருவதன் தொடர்ச்சியாக, தற்போதைய சூழலில் மக்களிடையே குறும்படங்களின் தாக்கம் அதிகரித்திருப்பதை அவதானிக்கமுடியும். திரைப்படங்களில் கையாளப்படும் மிகையதார்த்த மாயைகளைத் தவிர்த்து யதார்த்தத்தை முடிந்த அளவு சாத்தியமாக்கியதோடு, திரைப்படங்களில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட திரைமொழியையும், செய்தி சொல்லல் உத்தியையும் கொண்டிருந்த குறும்படங்கள் கொஞ்சங் கொஞ்சமாக வெகுசனப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதொரு மாற்றம்தான். 
Share This:   FacebookTwitterGoogle+

Monday, May 11, 2015

மாற்றத்தை நோக்கிய பாதையில் ஈழத்து சினிமா துறை !

இலங்கை தமிழ் சினிமாவின் இன்றைய நிலை என்ன? நேற்று ஆரம்பித்திருக்கும் குறும்பட அலைகளுக்குள் இந்த கேள்விக்கான பதிலை தேடுவது நியாயமில்லை என்பதால் சற்று முன்னோக்கிய நிலவரத்தையும் பார்ப்போம். 90க்கு முற்பட்ட எமது திரைப்படங்கள் எவையும் தற்போது ஆவணப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதனால் அவற்றை ஆராட்சிக்கு உட்படுத்துவது நமக்கு இயலாத நிலையில் அன்றைய சினிமா ஆர்வலர்களின் தரவுகளையே நாடவேண்டியுள்ளது. அவர்களது பதிவுகளின்படி தென்னிந்திய சினிமாவையே நம்மவர்கள் இங்கிருந்து மறுபதிப்பு செய்துகொண்டிருந்ததாக அறியமுடிகிறது. 90 இற்கு பின்னர் நிதர்சனத்தில் இருந்து எமது மண்வாசனையுடன் திரைப்படங்கள் உருவாகிக்கொண்டிருந்தாலும் பெரும்பாலும் அவை பிரச்சார சினிமா வகைக்குள்ளேயே சேர்ந்துகொள்கின்றன. ஆக, எமக்கான ஒரு சினிமா சமீபகாலமாகத்தான் மெல்ல மெல்ல தவழ ஆரம்பித்து மிக மெதுவாகவே நகர்ந்துகொண்டிருக்கிறது. வருடத்துக்கு சராசரியாக 40-50 குறும்படங்கள் வெளிவந்துகொண்டிருந்தாலும் தனித்துவமான மாற்றம் என்பது ஒன்றிரண்டு குறும்படங்களுடனேயே சுருங்கிக்கொண்டிருக்கிறது. அதன் காரணம் என்ன? இதற்கான பதிலை அறிந்துகொள்ள முன் இன்னும் சில விசயங்களை தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.
Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, September 4, 2013

துலைக்கோ போறியள் - ஈழத்து குறும்பட விமர்சனம்


ஈழத்து பேச்சுவழக்கில் பிரபலமான, ஆனால் தற்போது அருகிவரும் ஒரு சொல், “துலைக்கோ போறியள்”.  ஒருவர் புறப்படும்போது அல்லது எங்கேயாவது சென்றுகொண்டிருக்கும்போது “எங்கே போறீங்க?” என்று கேட்பது அபசகுனம் என்பதற்காக, அச்சொல்லுக்கு பதிலாக உபயோகிக்கப்படும் மங்களச் சொல்லே “துலைக்கோ போறியள்”. கிட்டத்தட்ட இன்றைய சந்ததியினரிடத்தில் அருகிப்போய்விட்ட இந்த சொல்லை தலைப்பாக கொண்டு மதி.சுதாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது “துலைக்கோ போறியள்” குறும்படம். 

Share This:   FacebookTwitterGoogle+

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |