Monday, July 4, 2016

தொகுப்பின் திறமையினால் படைப்புகளுக்கு மெருகூட்டியவர் மதுரன் ரவீந்திரன் !

“முழு நீளத் திரைப்படமானாலும் சரி அல்லது குறும்படமானாலும் சரி அவற்றின் திரைக் கதையானது அதன் தயாரிப்பில் இரண்டு நிலைகளில்தான் முழுமைபெறுவதாக நான் கருது கிறேன். ஒன்று இயக்குனரின் மேசையில். மற்றையது படத்தொகுப்பாளரின் மேசையில்” என்று தனது அனுபவத்தை சொல்லுகிற மதுரன் ரவீந்திரனிடம் அவர் ஆரம்ப வாழ்க்கை பற்றிக் கேட்டேன்.

“அம்மா வேலணையையும் அப்பா புளியங்கூடலையும் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். பிறந்து ஒரு மாத காலம் மாத்திரமே வேலணையிலிருந்ததாக அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.பின்பு விசுவமடுவுக்கு இடம்பெயர்ந்தோம். பின்பு மீண்டும் திரும்பவும் புளியங்கூடலுக்கு வந்துவிட்டோம். எனது ஆரம்ப கல்வி விசுவமடு மகாவித்தியாலயத்தில் தொடங்கியது. இடையில் பற்பல மாற்றங்கள். சாதாரண தரம் வரையும் வேலணை சென்றல் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியிலும் கற்றேன். உயர் தரம் வரை மொத்தம் ஆறு கல்விக் கூடங்களைச் சந்தித்திருக்கிறேன். 2007 ஆம் ஆண்டு புளிய ங்கூடலிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்து யாழ் நகரத்திற்கு வந்தேன். உயர் தரத்திற்கு பிறகு  ஓய்வு நேரம் அதிகம் கிடைத்தது. அப்போதுதான்  திரைப்படங்களை அதிகமாக பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. மொழி கடந்து பல படைப்புகளைப் பார்த் தேன்.  தொலைக்காட்சி வாடகைக்கு எடுத்து, ஜெனரேட்டர் மின்சாரத்தில் இரவிரவாக படம் பார்த்த காலத்தில் தொடங்கிய சினிமா மீதான மோகம் இந்த காலத்தில் மேலும் அதிகரித்தது. சினிமா குறித்த ஆழமான தேடலுக்கும் வழிவகுத்தது. அந்தக் காலகட்டத்தில் வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருந்தேன். நண்பர் மதி சுதாவும் வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருந்தார். அதனூடாக நாம் நண்பரானோம். பின்பு “ஆறுதல்” என்ற தொண்டர் நிறுவனத்தில் இருவரும் ஒன்றாகப் பணிசெய்யக் கூடிய சந்தர்பம் கிடைத்தது. அப்போது இருவரும் குறும்படம் எடுக்க விருப்பங் கொண்டிருந்தாலும்  வளங்களில்லாததால் முயற்சியைக் கைவிடவேண்டியதாயிற்று. சில நாட்களின் பின்னர் ஹரிகரன் என்ற நண்பரைச் சந்தித்தேன். அவர் கொழும்பில் நடக்கவிருந்த குறும்படப் போட்டிக்கு ஒரு படம் தயாரிக்கவிருப்பதாகச் சொன்னார். அந்தத் தயாரிப்புக்குத் தரப்பட்ட கால அவகாசம் ஒரு நிமிடம். அதற்காக படம் ஒன்றினைத் தயாரித்தோம். அதனை “திருப்பம்”  என்ற தலைப்பில் ஹரிகரன் இயக்க அதன் படத்தொகுப்பை நான் செய்தேன். அந்தப் படைப்புக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. அதுவே எனது கன்னிச் செயற்பாடு. எனது தேடலின் மூலமாகவே நான் படத்தொகுப்புக்கான  மென் பொருளைக் கையாளக் கற்றுக் கொண்டேன்.  படத்தொகுப்பு என்பது வெறுமனே மென்பொருளை கையாள்வது மாத்திரமல்ல. அது ஒரு கதை சொல்லல் முறை. இயக்குனரின் கையில் இருந்த கதையை பூரணப்படுத்தும் உத்தி என என் தேடல்களின் மூலம் தெரிந்துகொண்டேன்.” என தனது அனுபவத்தைச் சொன்னவரிடம் அவர் தொடர் முயற்சி பற்றிக் கேட்டேன்.

இயக்குனராகவோ, படத்தொகுப்பாளராகவோ, எப்படியாயினும் சினிமாவில் சிறந்ததொரு கதைசொல்லி ஆகவேண்டும் என்பதுதான் என் கனவு. படத்தொகுப்பாளராக இப்போது சந்தர்ப்பம் கைகூடியிருக்கிறது. இந்த துறையில் மேலும் என்னை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதே இப்போதைய தேவையாக இருக்கிறது. 

நன்பன் சஞ்சிகன் அறிமுகமான நாளில் இருந்து இருவரும் நம்மிடமுள்ள கதைகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதும் அதுபற்றி விவாதிப்பதுமாக இருக்கிறோம். அந்த விவாதங்களில் நன்றாக இருக்கிறது என தெரிவு செய்யப்படும் கதைகள் படமாகும். சஞ்சிகனின் கதைகள் சில படமாகிவிட்டன. எனது கதைகள் படமாகுவதற்கான ஒரு தருணத்திற்காக காத்திருக்கின்றன. அந்த தருணம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதுவாக நிகழும். அதற்காகத்தான் நானும் காத்திருக்கிறேன். அதேபோல எனது விஞ்ஞான புனைவு ஒன்றை "Pursuit" என்னும் பெயரில் திரைப்படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் சஞ்சிகன்” என்றார் அவர்.

தங்களது கதைகள் எப்படியானவை? சமூக நலன் சார்ந்த செய்திகளை சொல்லுகின்ற சமூக விழிப்புணர்வை தருபவைகளாக அமையுமா? அல்லது வெறும் கதைப்படங்களாக மட்டும் இருக்குமா? என்று மதுரனிடம் கேட்டேன்.

கலை என்பது வெறுமனே பொழுதுபோக்கு ஊடகமாக அமைந்துவிட்டால் நல்லது என்பதுதான் என் கருத்து. சமூகத்துக்கு அச்சுறுத்தலான கருத்துக்களை சினிமாவினூடாக விதைக்காதவரை சமூக நலன் சார்ந்த செய்திகளும் அவசியமற்றதாகத்தான் இருக்கும். ஆக, கலை ஒரு கொண்டாட்டத்திற்குரியதாக இருக்கும். ஆனால் இன்றைய சினிமா நிலவரம்தான் எல்லோருக்கும் தெரிந்ததே? 

சமூக நலன்சார்ந்த செய்திகளை திரைப்படங்களில் சொல்ல முயற்சிக்கும்போது அது திணிக்கப்பட்டதாகவோ, யதார்த்த வாழ்விற்கு அப்பாற்பட்டதாகவோ இருந்தால் மக்கள் இலகுவில் அவற்றை புறக்கணித்துவிடுகிறார்கள். நாம் கண்ட அனுபவம் இதுதான். சமீபத்தில்கூட “இறைவி” என்னும் தென்னிந்திய திரைப்படம் ஒன்று பெண்ணிய சுதந்திரம் பற்றி பேசியதற்காக கவனத்தை பெற்றது. ஆண்கள் பலரும் பெண்களின் நிலை பற்றி வருத்தத்தோடு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். உண்மையிலேயே அவர்கள் பெண்களின் உணர்வுகளை புரிந்துகொண்டார்களா என்றால் இல்லை. ஒருவாரம் கழிந்ததும் இறைவி திரைப்படம் கொடுத்த திரையரங்க மனநிலை மற்றும் கிளர்ச்சியில் இருந்து விடுபட்டு வழக்கமான  வாழ்விற்குள் நுழைந்துவிட்டார்கள். ஆக, இறைவி திரைப்படம் தற்காலிகமானதொரு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியதே தவிர எந்தவிதமான சமூகமாற்றத்துக்கும் அடிகோலவில்லை என்பதே யதார்த்தம். ஆகவே எனது படங்கள் எந்தவிதமான சமூக அச்சுறுத்தல் கருத்துக்களையும் விதைக்காத, சாதாரண பொழுதுபோக்கு படங்களாகவே இருக்கும். என்கிறார் மதுரன் ரவீந்திரன்.

சினிமாத்துறையில் உங்கள் முயற்சிகளுக்கூடாக யாரை அடையாளப்படுத்துகிறீர்கள்? யாரை முன்மாதிரியாகக் கொள்ளுகிறீர்கள்?

”எனக்கு பல இயக்குனர்களை பிடிக்கும். கிம் கி டுக், அல்கேந்திரோ இன்னாரிட்டு, நோலன் என பலரை பிடிக்கும். வான்கோவின் ஓவியங்களை போல கிம் கி டுக்கின் படங்களை காலவரையற்று பார்த்துக்கொண்டே இருப்பேன். ஆனாலும் யாரை முன்மாதிரியாக கொள்வது என்பதில் சிக்கல். முன்மாதிரி என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் யாரையும் முன்மாதிரியாகக் கொள்வதில்லை. எனக்கென ஒரு தனித்துவத்தைப்பேண வேண்டுமென்பது எனது குறிக்கோள். எனது படைப்புகளில் எமது அடையாளங்கள் அதிகம் பேணப்பட வேண்டு மென்பதுவும், அவற்றில் எமது கதைகளையே  சொல்ல வேண்டும் என்பதுவும் எனது விருப்பமும் எதிர்பார்ப்புமாகும்.

பொதுவாக சினிமா துறை என்று பார்க்கப்போனால் ஈழத்துச் சினிமாத்துறையில் உள்ளவர்கள்  ஈரானியத் துறையை தமக்கு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது ஈரானிய சினிமா துறையை, அதன் வளர்ச்சியை எடுத்து கொள்ளலாமேயொழிய ஈரானிய சினிமாக்களை அல்ல. ஈரானியர்களின் வாழ்வியல் வேறு எமது வாழ்வியல் வேறு. இரண்டையும் ஒப்பிடமுடியாது. ஈரானிய சினிமாவை எடுத்துக் கொண்டால் அது இப்போது நாங்கள் இருக்கின்ற தொரு சூழ்நிலையில் இருந்துதான் எழுச்சியும், வளர்ச்சியும் பெற்றிருக்கிறது. எப்படியென்றால் எமது சினிமாவின் உண்மைத் தன்மையை எப்படி தென்னிந்திய சினிமாத்துறை பாதிப்பிற்கு உள்ளாக்குகிறதோ, அப்படியே அமெரிக்க சினிமாக்களும் ஈரானிய சினிமாவின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாகப் பாதிப்பிற்குள்ளாக்கியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஈரானிய சினிமாக்களெல்லாம் அமெரிக்க சினிமாவின் தழுவல்களாகவே அல்லது அவற்றின் பிரதிகளாகவே இருந்திருக்கின்றன. அத்தனை பாதிப்பிற்கு உள்ளாகியிருந்த ஈரானிய சினிமாவானது ஈரானியப் புரட்சியின் பின்னர்தான் எழுச்சி பெற்றதைக் காணலாம். எனவேதான் ஈரானிய சினிமாத் துறையைப் பின்பற்ற வேண்டுமென்று சொல்கிறேன்” என்றார் அவர்.

ஈழத்து சினிமாவானது எதிர்காலத்தே ஆரோக்கியமானதும் எங்களுக்கானதுமான சினிமாவாக வர வாய்ப்பிருக்கிறதா? என எனது உரையாடலின் முடிவில் மதுரனைக் கேட்டேன்.

“தற்போது ஈழத்து சினிமாவானது ஒரு கலங்கல் நிலையிலேயே உள்ளது. உடனடியாக அத்தகைய வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் ஆரோக்கியமான எதிர்காலம் உண்டென்பதற்குச் சான்றாக அவ்வப்போது நம்பிக்கையைத் தரக்கூடிய படைப்புகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய படைப்புகளின் படைப்பாளிகள் தான் எங்களுக்குரிய சினிமாவின் ஆரம்பகர்த்தாக்கள் என எண்ணுகிறேன். அத்துடன் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கக் கூடியவர்களும் அவர்களே” என தனது கருத்தைத் தெரிவித்த மதுரன் அடக்கமானவர். தனது கருத்துக்களை உறுதி படத்தெரிவிப்பவர். சொல்லிலும் விடச் செயலில் நாட்டமுள்ளவர். வாசிப்பதில் அதிக ஆர்வமும்,  ஆழ்ந்த இலக்கிய இரசனையையுமுடைய ஒரு இளைஞனைச் சந்தித்த திருப்தியில் அவரிடமிருந்து விடைபெற்றேன்.

நேர்காணல்
கணபதி சர்வானந்தா

9 comments:

  1. அருமை அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துகள் சகோ. கலக்குங்க😊

    ReplyDelete
  3. வாழ்த்துகள் சகோ. கலக்குங்க😊

    ReplyDelete
  4. வாழ்த்துகள் சகோ. கலக்குங்க😊

    ReplyDelete
  5. உங்கள் பதில்கள் சிறப்பாக இருக்கின்றன ஆனால் கேள்விகள் உங்கள் சிந்தனைகளை கிளர்ச்சி அடையச் செய்யவில்லை ( தட்டையாக இருக்கின்றன .

    ReplyDelete

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |