Friday, February 3, 2012

கல்கி என்னும் அற்புதம் என்னை கட்டிப்போட்ட மாயம்

”கல்கி” உண்மையிலே ஒரு அற்புதம் தான். 12 வயதில் ஆரம்பித்த கல்கி மோகம் இன்று வரை மூன்று நாவல்கலுடன் சுற்றிசுழன்றுகொண்டிருக்கிறது. வரிக்கு வரி வாசகர்களை கட்டிப்போடும் ஒரு ஆற்றல் நூற்றுக்கு நூறுவீதம் அமையப்பெற்றவர் என்றால் அது கல்கிதான். 12 ஆவது வயதிலேயே கல்கி என் மீது ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை வேறு நூல்களை அதிகம் நாடவிடாது கல்கி என்ற ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றவிட்டதுதான்.

முதன்முதலில் நான் படித்த கல்கியின் வரலாற்று நாவல் “பொன்னியின் செல்வன்”. அது ஒரு தற்செயலான சம்பவம் என்றுதான் சொல்லவேண்டும். அப்போது நாங்கள் வேலணையில் இருந்தோம். எங்கள் சித்தி யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். அவர் வீட்டை காலி செய்தபோது நானும் கூடவே இருந்தேன். அப்போது சித்தி பல பழைய புத்தகங்களை எடுத்து வீட்டின் ஒரு மூலையில் போட்டுவிட்டு “ இந்த பழைய புத்தகங்களை மாநகரசபை குப்பை வண்டி வரும்போது அதில் ஏற்றிவிடுவோம்” என்று சொன்னார். அப்போது நான் சின்ன பையன் தானே. என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம் என அந்த புத்தகக்கட்டை, சித்தியின் பேச்சுகளுக்கிடையில் கிளறிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு கதைப்புத்தகம் கண்ணில் பட்டது. முன்புறமும் பின்புறமும் அட்டைகள் இல்லாமல் பல பக்கங்கள் கறையான் அரிக்கப்பட்டு இருந்தது. ஏதோ ஒரு கதைப்புத்தகம்.. படிக்கலாம் என்று எடுத்து வைத்துக்கொண்டேன்.


பின்னர் பல மாதங்களாக அது கவனிக்கப்படாமல் மேசையிலேயே இருந்தது. ஒரு நாள் எதேச்சையாக புத்தகத்தை கையில் எடுத்தேன். என்னவென்று சொல்வது ! அதுவரை இராமாயணம், மகாபாரதம் என்ற இதிகாசங்களுடனும் பத்திரிகைகளில் வரும் கார்டூன் கதைகளுடனும் வலம்வந்த எனக்கு, பொன்னியின் செல்வன் மிகப்பெரிய அற்புதம். அரைகுறையாக இருந்த முதலாம் பாகமே என்னை அடிமையாக்கிவிட அப்பாவிடம் அடம்பிடித்து பூபாலசிங்கம் புத்தகசாலையில் ஐந்து பாகங்களையும் வாங்கினேன்.

சில காலங்கள் பள்ளிப்புத்தங்களை ஓரம் வைத்துவிட்டு பொன்னியின் செல்வனுடன் உறவாடத்தொடங்கிவிட்டேன். கபடமில்லா வீரன் வல்லவரையன் வந்தியத்தேவன், பழிதீர்க்கும் வஞ்சத்துடன் அலையும் நந்தினி, “பொன்னியின் செல்வன்” அருள்மொழிவர்மன், அடிக்கடி மூர்ச்சையற்று விழும் வானதி, குந்தவி, ஆழ்வார்க்கடியான், கொள்ளிடக்கரை, பழுவேட்டரையர், பழையாறை என எனக்குள்ளேயே ஒரு உலகை சிருஷ்டித்து அவர்களுடன் சஞ்சரிக்கத்தொடங்கினேன். அதன் பலன் அடுத்து வந்த பாடசாலை பரீட்சையில் கோட்டை விட்டேன்.

பொன்னியின் செல்வனின் தாக்கம் கல்கியின் எழுத்து மீதான காதலை அதிகரிக்க கல்கியின் நூல்களை தேடத்தொடங்கினேன். சோலைமலை இளவரசி, அலை ஓசை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. இருந்தாலும் வரலாற்று நாவல்கள் மீதான அதீத ஈர்ப்பால் பொன்னியின் செல்வனுக்கு பிறகு “சிவகாமியின் சபதம்”  அதிகமாக என்னை ஆட்கொண்டது. வரலாற்று நாவல் என்பதோடு மாமல்லனுக்கும் சிவகாமிக்கும் இடையிலான அற்புதமான காதலை சொன்ன நாவல் என்பதால் பொன்னியின் செல்வனை விட அதிகம் என்னை கவர்ந்தது.

மாமல்லனும் சிவகாமியும் காதல்கொள்ளும் குள்ளத்தருகில் நானும் கூட இருந்தேன், இருவரும் ஊடல் கொள்ளும்போது நானே தூது போயிருக்கிறேன், மகேந்திர பல்லவனுடன் மாறுவேடத்தில் சுற்றினேன், நாகநந்தி பிக்குவின் பின்னால் ஒற்றனாக அலைந்தேன், ஆயனரின் சிற்பக்கூடத்தில் எழும் உளி ஓசையில் என்னை மறந்தேன்,சிவகாமியின் நாட்டியத்தை மெய்மறந்து ரசித்தேன், வாதாபி படையெடுப்பில் மாமல்லனுடன் கைகோர்த்து போரிட்டேன்.. பல்லவ சைன்ய தளபதி பரஞ்சோதியுடன் அளவளாவினேன். மொத்தத்தில் அந்த நாவலுடனேயே ஒன்றித்துப்போனேன். இதுவரை ஆறு தடவைகள் படித்து முடித்துவிட்டேன். ஆனாலும் தாகம் தீரவில்லை. “சிவகாமியின் சபதம் காதலியின் கடிதம் போன்றது” திரும்ப திரும்ப படிக்கும்போது அதன் மீதான ஈடுபாடு கூடிக்கொண்டே போகிறது.

இதுவரை பொன்னியின் செல்வனை 11 தடவைகளும் சிவகாமியின் சபதம் 6 தடவைகளும் படித்துவிட்டேன். கல்கியின் எழுத்தின் மீதான காதல் வேறு நூல்களை நாட என்னை அனுமதிக்கவில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபததுடனேயே கழிகிறது. அவப்போது வேறு நூல்களை படித்தாலும் அவற்றுடன் ஒன்றித்துபோகமுடியவில்லை. அரைவாசி படித்துக்கொண்டிருக்கும்போதே “ அட.. இது என்ன...... பொன்னியின் செல்வனை படிப்போம்” என மறுப்டியும் கல்கியுடன் சங்கமித்துவிடுவேன். கல்கியை தவிர நான் ரசிக்கும் இன்னொருவர் ஈழத்து எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்கள்தான்.

”பொன்னியின் செல்வன்” நாவலை மணிரத்னம் திரைப்படமாக்க முயற்சித்தபோதே ஒரு வித ஆவல் என்னுள் பற்றிக்கொண்டது. அதிலும் பொன்னியின் செல்வன் நாவலில் எல்லோர் மனதையும் கொள்ளைகொண்ட வந்தியத்தேவன் பாத்திரத்தில் எனக்கு பிடித்த நாயகன் விஜய் நடிக்கப்போகிறார் என்றதுமே ஒருவித ஆவல் எழுந்தது. ஆனாலும் மறு புறத்தில் ஒரு பயமும் இருந்தது. காரணம் கல்கி எழுத்தில் சிருஷ்டித்த அந்த அற்புத உலகத்தை மணிரத்னத்தால் மட்டுமல்ல, வேறு எவராலும் காட்சிபுலத்தில் கொண்டுவரமுடியாது என்பதே. அப்படி அந்த திரைப்படம் வந்திருந்தால் கல்கியின் எழுத்துக்களால் எம் மனவுலகில் சிருஷ்டிக்கப்பட்ட அந்த அற்புத பூமி நிச்சயம் சிதைக்கப்பட்டிருக்கும்.


குறிப்பு: நண்பர்களே! என் தளத்தில் இருந்து ஓட்டுப்பட்டைகள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டேன். அது இருக்கும்வரை எனக்கும் பளு, ஏனையவர்களுக்கும் பளு. அதோடு இந்த ஓட்டு, ஹிட்ஸ் எல்லாம் என்னத்துக்கு என்று தோன்றுகிறது. இவை இருக்கும்வரை எம்மை அடிமைப்படுத்திக்கொண்டே இருக்கும். ஹிட்ஸை தூக்கி எறிந்துவிட்டபடியால் இனி பிடித்த பதிவுகளுக்கு மட்டுமே படித்து பின்னூட்டமிடுவேன். நான் ஓட்டுப்பட்டைகள் இணைக்காவிட்டாலும் நண்பர்களின் பதிவுகளுக்கு ஓட்டளிப்பேன்.

19 comments:

  1. வணக்கம் மது,
    நல்லதோர் பதிவு,

    எப்போதுமே படைப்புக்கள் வாசகனின் மனதோடு ஒன்றித்துப் போகும் வண்ணம் படைப்பாளி தன் படைப்புக்களை கொடுக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அது கல்கி அவர்களுக்கு கை வந்த கலை!

    கல்கியின் எழுத்துக்கள் இந்தத் தலைமுறை இளைஞர்களிடையையும் செல்வாக்கு செலுத்துகிறது என்றால், மிக்க மகிழ்ச்சி!

    நல்லதோர் ரசனைப் புலத்தினை வெளிக்கொணரும் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

    ReplyDelete
  2. வணக்கம் மது,
    நல்லதோர் பதிவு,

    எப்போதுமே படைப்புக்கள் வாசகனின் மனதோடு ஒன்றித்துப் போகும் வண்ணம் படைப்பாளி தன் படைப்புக்களை கொடுக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அது கல்கி அவர்களுக்கு கை வந்த கலை!

    கல்கியின் எழுத்துக்கள் இந்தத் தலைமுறை இளைஞர்களிடையையும் செல்வாக்கு செலுத்துகிறது என்றால், மிக்க மகிழ்ச்சி!

    நல்லதோர் ரசனைப் புலத்தினை வெளிக்கொணரும் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.

    ReplyDelete
  3. மது , நிஜமாகவே நீங்க வித்தியாசமானவர்தான்.12 வயதில் கல்கி உங்களை கவர்ந்ததும், பொன்னியின் செல்வனை 11 தடவைகள் படித்ததுவும் சாதாரணமானதல்ல. ஒன்று புரிகிறது தமிழ் இனிமெல்லச்சாகும் என்றெல்லாம் பீதிகொள்ளத்தேவையில்லை. தமிழின் இனிமையில் காதல்கொண்ட மற்றுமொரு சந்ததி உருவாகிவருகிறது.

    ReplyDelete
  4. வணக்கம் மதுரன்!பொன்னியின் செல்வனை பதினோரு தடவைகள் படித்தது சாதனைதான்!வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வரலாற்று நாவலாசிரியர்களில் கல்கி என்ற மாமனிதர்
    ஒரு கல்வெட்டு என்றே சொல்லலாம்...
    "பொன்னியின் செல்வன்" நாவலை படித்து அன்று ஏற்ற
    வியப்பு இன்றும் அகலவில்லை...
    வரலாற்று எழுத்துச் சித்தரை நினைவுபடுத்தியமைக்கு
    நன்றிகள் பல நண்பரே...

    ReplyDelete
  6. கல்கியின் எழுத்துக்கு அடிமையாகாத தமிழர் யாருமில்லை மதுரன்....செங்கை ஆழியான் பற்றியும் தெரிந்து கொண்டேன்..கட்டுரைக்கு நன்றி...

    ReplyDelete
  7. படிக்க படிக்க திகட்டாத புத்தகம் ! நல்ல பதிவு ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  8. வணக்கம் பாஸ்
    முன்பு இந்திய வானொலி ஒன்றில் சிவகாமியின் சபதம் நாடகமாக இரவு போடுவார்கள்.

    அதில் அந்த நாடகத்தை அறிவிக்கும் போது அந்த அறிவிப்பாளர் கம்பீரமாக சொல்வார் ’அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம்”என்று
    கல்கி பற்றி முன்பே அறிந்திருந்தாலும் அப்போதுதான் நான் சிவகாமியின் சபதம் நாவல் பற்றி அறிந்து கொண்டேன்.அந்த நாடகம் முடிந்த பின்னர்தான் சிவகாமியின்ச் சபதம் நாவலை வாசித்தேன்.மிக அருமையான ஒரு நாவல் கல்கிக்கு நிகர் கல்கிதான்.

    நல்ல பகிர்வு

    ReplyDelete
  9. காலம் எல்லாம் இலக்கிய வானில் மறக்க முடியாத ஒளி நட்சத்திரம் கல்கி அவர்களின் படைப்பில் எனக்கு எப்போதும் பிடித்தது பொன்னியின் செல்வன் தான் அதுவும் இலக்கியத்துன் ஊடே இரண்டு தேசம் வந்து போகும் ஈழத்தில் அரச விரோத செயலிற்கு இருக்கும் பழுவேட்டையார் நம்பி அடிகள் பாத்திரம் என ஒரு மாய வினோதம் கொண்ட கதை . இந்த நாவல் எல்லாம் பலதடவை படித்திருக்கிறீங்கள் என்ற போது சந்தோஸம் அதிகம் தான். பூங்குழலி பரிசலில் பாடும் கவிதை மறக்க முடியாது.

    ReplyDelete
  10. வணக்கம் மது,

    தலைப்பைப் பார்த்ததும் படிக்க வேண்டும் என்கின்ற ஒரு முடிவோடு இருந்தேன். இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது. எனக்கு பிடித்த மிகவும் அருமையான பதிவு. கல்கி என்பதே எப்பொழுதும் எழுத்துலகில் ஒரு புரட்சிதான். பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. நானும் கல்கியை ரசிப்பவன். பொன்னியின் செல்வன் விட்டு சென்ற பாதிப்பு எனக்கு இப்பொழுதும் நீங்கள் இதை பற்றிப் பேசும் போது மேலெழுகிறது? வாழ்த்துக்கள் மது.

    உங்கள் ரசனைக்கும், வாசிப்பின் மேல் உங்களுக்குள்ள ஆர்வத்திற்கும் சலூட் பாஸ்.

    ReplyDelete
  11. நம் பிள்ளைகளுக்கு தமிழ் மீது ஒரு ஈடுபாடும், மரியாதையும் வரவேண்டுமா? அவரது நாவல்களை படிக்க சொல்லவேண்டும். தற்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு இவர் யார் என்றே தெரியவில்லை.

    ReplyDelete
  12. நானும் உங்களைப்போல்தான், கல்கி ரசிகன் . ஆனால் சிறுகதைப் பக்கமும் போய்ப்பாருங்களேன்? வண்ணநிலவன், புதுமைப்பித்தன், ஜெயக்காந்தனின் பழைய சிறுகதைகள், ஜானகிராமன் என்று ஒரு புது உலகமே உண்டு.

    ReplyDelete
  13. வணக்கம் மதுரன்...
    மிக மிக அருமையான கட்டுரை இது.. உங்கள் தமிழ் நடை மிகவும் அருமை.
    நான் இது வரை பொன்னியின் செல்வன் படித்ததில்லை. உங்கள் பதிவை படித்த பிறகு ஏன் இன்னும் படிக்காமல் இருக்கிறோம் என்று தோன்றியது. அவ்வளவு அருமையான நடையில் எழுதி இருக்கிறிர்கள்.
    இனி கல்கியின் எழுத்துகளை தேடி படிப்பேன்.

    ReplyDelete
  14. இன்று வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வந்தேன்.

    நான் பொன்னியின் செல்வனின் மிகப் பெரிய விசிறி. இன்னும் படித்துக் கொண்டே இருக்கிறேன்...நேரம் கிடைக்கும் போதெல்லாம்.

    இன்றைய தலைமுறையினரையும் கவர்ந்திழுக்கும் எழுத்துக்கள் கல்கியின் பொன்னியின் செல்வன்.

    நேரமிருந்தால் இந்தப் பதிவை படியுங்கள்:
    http://wp.me/p22miG-3T

    நன்றி!

    ReplyDelete
  15. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2015/01/1_20.html?showComment=1421714790870#c142186046049912880
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  17. திருமதி மனோ சாமிநாதன் தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதையறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.com
    www.ponnibuddha.blogspot.com

    ReplyDelete
  18. இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.
    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |